×

விரிகோடு ரயில்வே கிராசிங் கேட் திறக்க முடியாமல் தவிப்பு: போக்குவரத்து துண்டிப்பு

 

மார்த்தாண்டம், பிப். 19: விரிகோடு ரயில்வே கிராசிங் கேட் நேற்று மாலை 6 மணிக்கு திறக்க முடியாமல் இருந்தது. இதனால் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. திருவனந்தபுரம் ரயில்வே மின்பாதையில் துண்டிப்பு ஏற்பட்டதால் நேற்று காலை 11.30 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பிறகு வரிசையாக ரயில்கள் சென்று கொண்டிருந்தன. நேற்று மாலை 6 மணி அளவில் கொல்லத்திலிருந்து குழித்துறை வழியாக சென்னைக்கு அனந்தபுரி ரயில் சென்றது.

இதற்காக மார்த்தாண்டத்திற்கும் கருங்கலுக்கும் இடைப்பட்ட விரிகோடு ரயில்வே கேட் மூடப்பட்டது. இருபுறமும் ஏராளமான பஸ்கள் மற்றும் வாகனங்கள் வரிசையாக நின்றன. ரயில் சென்ற பிறகு அந்தப் பகுதி ரயில்வே ஊழியர் கேட்டை திறக்க முயற்சி செய்த போது திறக்க முடியவில்லை. இதனால் மார்த்தாண்டத்திற்கும் கருங்கலுக்கும் இடைப்பட்ட தளத்தில் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது.

மார்த்தாண்டத்திலிருந்து வாகனங்கள் பள்ளியாடி வழியாக திருப்பி விடப்பட்டது. இரவு 8 மணி வரை இந்த ரயில்வே கேட் திறக்க முடியாத சூழ்நிலை தொடர்ந்தது. இந்த கேட் இதைப்போல் பலமுறை திறக்க முடியாமல் பிரச்சனை ஏற்கனவே ஏற்பட்டுள்ளது. நேற்று ரயில்வே மின்பாதையில் துண்டிப்பு அதனைத் தொடர்ந்து இந்த ரயில்வே கேட் திறக்க முடியாத சூழ்நிலை என ஒரே நாளில் இரண்டு பிரச்னை தொடர்ந்தது.

The post விரிகோடு ரயில்வே கிராசிங் கேட் திறக்க முடியாமல் தவிப்பு: போக்குவரத்து துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Bay Railway Crossing Gate ,Thiruvananthapuram ,Railway ,Dinakaran ,
× RELATED கேரளாவில் மனித உடல் உறுப்புகளை கடத்தி...